×

கீழம்பி திருமலை கல்லூரி மாணவிகளுக்கு ரூ.4.81 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவி: கலெக்டர், எம்பி வழங்கினர்

காஞ்சிபுரம்: கீழம்பி ஸ்ரீதிருமலை பொறியியல் கல்லூரியில் 60 மாணவ – மாணவிகளுக்கு ரூ.4.81 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன், செல்வம் எம்பி ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி ஸ்ரீதிருமலை பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமினை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலமாக கல்வி கடன் பெற மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Vidhyalakshmi Portal’ (www.vidhyalakshmi.co.in) குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘Education Loan Mela’ நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை மூலமாக அறிவுரைகள் பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து, அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து ‘Vidhyalakshmi Portal’ குறித்த பதிவு முறைகளை எடுத்துரைத்ததோடு அனைத்து மாவட்ட நிலையில் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று ‘Vidhyalakshmi Portal’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 22.11.2023 அன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பென்னலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி நடந்த கல்வி கடன் முகாமில், சுமார் 112 மாணவ – மாணவிகளுக்கு ரூ.13.19 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 60 மாணவ – மாணவிகளுக்கு சுமார் ரூ.4.81 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜராமன், தலைமை பிராந்திய மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) சிக்கிரிலால், முன்னோடி வங்கி மேலாளர் திலீப், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், முன்னோடி வங்கி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

The post கீழம்பி திருமலை கல்லூரி மாணவிகளுக்கு ரூ.4.81 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவி: கலெக்டர், எம்பி வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Keezhampi Tirumala College ,Kanchipuram ,Kalachelvi Mohan ,Selvam ,Keezhampi Srithirumalai College of Engineering ,Kanchipuram district ,Keezhampi Tirumalai College ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலைகளில் பணிபுரியும்...